articles

img

ஓசையில்லாமல் அழியும் ஒட்டகச்சிவிங்கிகள்

       உலகில் உயரமான வன விலங்கினங்களில் ஒன்று ஒட்டகச்சிவிங்கி. இப்போது இவற்றின் பாதுகாப்பு குறித்து சுபகரமானசெய்திகள் வருவதில்லை.  இன்று உலகில் 68,000 ஒட்டகச்சிவிங்கிகள் மட்டுமே வாழ்கின்றன என்று விலங்குகளின் நலனுக்கான சர்வதேச நிதியம் (International Fund for Animal Welfare IFWA) கூறுகிறது. பாதுகாக்கப்படவேண்டிய உயிரினங்களின் பட்டியலில் பல சமயங்களிலும் இந்த விலங்குகள் இடம்பெறுவதில்லை.

முப்பதாண்டில் நாற்பது சதவிகித குறைவு

     கடந்த முப்பதாண்டில் ஆப்பிரிக்காவில் மட்டும் இவற்றின் எண்ணிக்கையில் 40% குறைவு ஏற்பட்டுள்ளது. இப்போது மற்ற வன விலங்கு பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து இந்த அமைப்பு அமெரிக்க நிர்வாகத்திடம் அழியும் ஆபத்தில் இருக்கும் உயிரினங்களின் பட்டியலில் இந்த விலங்குகளையும் சேர்க்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

 ஓசையில்லாமல் நிகழும் இன அழிவு

     சமீபகாலத்தில் ஒரு உயிரினத்தின் எண்ணிக்கை அது அழியும் நிலைக்குக் குறைந்தால் அது நிசப்த அழிவு (Silent extinction) என்று அழைக்கப்படுகிறது. இவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் குறைவு கவனிக்கப்படாமல் போகிறது. இனியும் அமைதி  யாக இருக்கமுடியாது. குரல் எழுப்பவேண்டும் என்று விலங்குகள் நல அமைப்பு கூறுகிறது.  யு எஸ் மீன் வளம் மற்றும் வன உயிரினப் பாதுகாப்பு சேவைகள் இது குறித்து 2024இல் இறுதி முடிவு எடுக்கும் என்று கருதப்படுகிறது.

அழிவின் காரணங்கள்

       18 அடி வரை இவை நீளமாக வளர்கின்றன. நான்கு வயதாகும்  போது இவை முழு உயரத்தை அடைகின்றன. விவசாயத் தேவை களுக்காக வனப்பகுதி ஆக்கிரமிப்பு இவற்றின் வாழிட இழப்பிற்குக் காரணம் என்று 2016இல் நடத்தப்பட்ட ஆய்வு எச்சரிக்கிறது. சர்வதேச வளப் பாதுகாப்பு சங்கத்தின் புள்ளி விவரங்கள்படி இவை ஆரம்பத்தில் அழியும் ஆபத்தில்லாதவை (LC) பிரிவில் உட்படுத்தப்பட்டிருந்தன.

     ஆனால் 2016இல் இவை அழியும் ஆபத்தில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.  

     ஓசையில்லாமல் ஏற்படும் இவற்றின் இன அழிவு மனித குலத்திற்கு விரைவில் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.